துல்ஹஜ் -8,9 மினாவில் தொழுகைகள் -அராஃபாவுக்கு செல்லுதல் -அராஃவில் துஆ செய்தல்.
துல்ஹஜ் பிறை 8 அன்று, லுஹருக்கு முன்னதாக மினாவிற்கு சென்று இருப்பீர்கள். லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். (மஃரிபைத் தவிர மற்ற தொழுகைகளை) இரண்டு, இரண்டு ரகஅத்களாக (ஒவ்வொரு தொழுகையையும் அந்தந்த நேரத்தில்) தொழ வேண்டும்.
”தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ”மினாவில்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல் அஸீஸ் பின் ரபீவு, நூல்: புகாரி 1653, 1763
”எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856
இரண்டிரண்டாக
இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும்.
மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)
நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656
கஸர் மட்டுமே! ஜம்வு இல்லை
அனைத்து தொழுகைகளையும் (கஸர்) சுருக்கி தொழ வேண்டும்.
ஆனால், (ஜம்வு) சேர்த்துத் தொழக்கூடாது. அதாவது, ஒவ்வொரு தொழுகையையும் அந்தந்த நேரத்தில் தொழுது கொள்ள வேண்டும்.
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.
”நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.”
(நூல்: முஸ்லிம் 2137)
செல்லும் வழியில் தல்பியா, தக்பீர் கூற வேண்டும்
மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.
”நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன்.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் ”தல்பியா கூற விரும்பியவர், தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்”
அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அபீபக்ர்
நூல்: புகாரி 970, 1659
அரஃபாவில் தங்குவதன் அவசியம்
ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.
”ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814
ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும்,
பத்தாம் நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் கூடி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்
அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம்.
”அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபி மொழி.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(நூல்: முஸ்லிம் 2138)
எனினும், நீங்கள் தங்கும் இடம் அரஃபா பெருவௌிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் அரஃபாவில் தங்காவிட்டால் ஹஜ் கூடாது. ஏனெனில்,
”ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான்...” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814
அரஃபா மைதானத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பாவ மன்னிப்பு தேட வேண்டும்.
”நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.”
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: நஸயீ 2961
அரஃபாவில் தொழுகை எப்படி?
அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும்.
முன்பின் சுன்னத், வேறு தொழுகைகள் இல்லை
”…பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச்செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.”
நூல்: முஸ்லிம் 2334
குத்பாவை கேட்பது அவசியம்
தொழுகைக்கு முன், முன் நிகழ்த்தப்படும் குத்பாவை (உரையை) செவிமடுக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ”உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு இல்லை
அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது, ஹஜ் செய்யாத மக்களுக்கு சுன்னத் என்றாலும், ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.
பார்க்க: புகாரி 1658, 1663, 1988, 1989, 5604, 5618, 5636
அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்க வேண்டும். எனினும், இப்போது மஃரிப் தொழக்கூடாது. மஃரிப் தொழாமல், முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment